창세기 17장 타밀 OITCE
- 1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தபோது, யெகோவா அவனுக்குத் தோன்றி, “நான் எல்லாம் வல்ல இறைவன்; நீ எனக்கு முன்பாக உண்மையாய் நடந்து குற்றமற்றவனாய் இரு.
- 2 நான் உனக்கும் எனக்கும் இடையில் என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, மேலும் உறுதிப்படுத்துவேன், உன்னை மிகவும் பெருகப்பண்ணுவேன்” என்றார்.
- 3 ஆபிராம் முகங்குப்புற விழுந்தான், இறைவன் அவனுடன் பேசி,
- 4 “என்னைப் பொறுத்தமட்டில் நான் உன்னுடன் செய்யும் உடன்படிக்கை இதுவே: நீ பல நாடுகளுக்குத் தகப்பனாவாய்.
- 5 நான் உன்னை அநேக நாடுகளுக்குத் தகப்பனாக்கியிருப்பதால், இனி நீ ஆபிராம் என்று அழைக்கப்படாமல், ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய்.
- 6 நான் உன்னை மிகவும் இனவிருத்தி உள்ளவனாக்குவேன்; உன்னிலிருந்து பல நாடுகளை உருவாக்குவேன், அரசர்கள் உன்னிலிருந்து தோன்றுவார்கள்.
- 7 நான் உன் இறைவனாகவும் உனக்குப்பின் உன் சந்ததிகளுடைய இறைவனாகவும் இருப்பேன்; இந்த என் உடன்படிக்கையை, எனக்கும் உனக்கும் இடையில் ஒரு நித்திய உடன்படிக்கையாக உன்னுடனும் உனக்குப்பின் தலைமுறைதோறும் உன் சந்ததிகளுடனும் ஏற்படுத்துவேன்.
- 8 நீ இப்பொழுது அந்நியனாய் வாழும் இந்தக் கானான் நாடு முழுவதையும், உனக்கும் உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் ஒரு நித்திய உடைமையாகக் கொடுப்பேன்; நானே அவர்களுக்கு இறைவனாய் இருப்பேன்” என்றார்.
- 9 அதன்பின் இறைவன் ஆபிரகாமிடம், “உன்னைப் பொறுத்தமட்டில், என் உடன்படிக்கையை நீயும் உனக்குப்பின் உன் சந்ததியும் தலைமுறை தலைமுறையாக அதைக் கடைபிடிக்க வேண்டும்.
- 10 நான் உன்னோடும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிகளோடும் செய்துகொள்ளும் என் உடன்படிக்கையில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய பங்காவது: உங்கள் மத்தியில் உள்ள ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும்.
- 11 நீயும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும், அது எனக்கும் உனக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்.
- 12 தலைமுறைதோறும், ஒவ்வொரு ஆண் குழந்தைக்கும் பிறந்து எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும். உங்கள் குடும்பத்தில் பிறந்தவர்களுக்கும், உங்கள் சந்ததியாய் இராமல், அந்நியரிடமிருந்து பணத்துக்கு வாங்கப்பட்டவர்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்.
- 13 அவர்கள் உன் குடும்பத்தில் பிறந்தவர்களாய் இருந்தாலென்ன, பணத்திற்கு வாங்கப்பட்டவர்களாய் இருந்தாலென்ன, அவர்களுக்கும் கட்டாயம் விருத்தசேதனம் செய்யவேண்டும். இவ்வாறு இது உங்கள் உடலில் என் நித்திய உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கும்.
- 14 எந்த ஆணுக்கும் தன் உடலில் நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படாதிருந்தால், அவன் தன் சொந்த மக்களிலிருந்து விலக்கப்படுவான்; ஏனெனில், அவன் என் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டான்” என்றார்.
- 15 மேலும் இறைவன் ஆபிரகாமிடம், “உன் மனைவி சாராயை இனிமேல் நீ சாராய் என்று அழைக்கவேண்டாம்; சாராள் என்பதே அவள் பெயராகும்.
- 16 நான் அவளை ஆசீர்வதித்து, நிச்சயமாக அவள் மூலம் உனக்கு ஒரு மகனைக் கொடுப்பேன். நான் அவளை ஆசீர்வதிப்பதனால், அவள் நாடுகளுக்குத் தாயாவாள்; மக்கள் கூட்டங்களின் அரசர்களும் அவளிலிருந்து தோன்றுவார்கள்” என்றார்.
- 17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து சிரித்து, “நூறு வயதுள்ள மனிதனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதில் சாராள் பிள்ளை பெறுவாளோ?” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
- 18 மேலும் ஆபிரகாம் இறைவனிடம், “இஸ்மயேல் உம்முடைய ஆசீர்வாதத்தில் வாழ்ந்தாலே போதும்!” என்று சொன்னான்.
- 19 அதற்கு இறைவன், “ஆம்; ஆனாலும், சாராள் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடு. என் உடன்படிக்கையை நான் அவனுடன் ஏற்படுத்துவேன்; அது அவனுக்குப்பின் அவனுடைய சந்ததிகளுக்கு ஒரு நித்திய உடன்படிக்கையாக இருக்கும்.
- 20 இஸ்மயேலைப் பொறுத்தமட்டில், நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்: நான் அவனை நிச்சயமாக ஆசீர்வதிப்பேன்; நான் அவனை இனவிருத்தி உள்ளவனாக்கி, அவனுடைய சந்ததியையும் பலுகிப் பெருகப்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு ஆளுநர்களுக்குத் தகப்பனாயிருப்பான், நான் அவனை ஒரு பெரிய நாடாக்குவேன்.
- 21 ஆனால், அடுத்த வருடம் இதே காலத்தில், சாராள் உனக்குப் பெறப்போகும் ஈசாக்குடனேயே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்” என்றார்.
- 22 இறைவன் ஆபிரகாமுடன் பேசி முடித்தபின் மேலெழுந்து போனார்.
- 23 ஆபிரகாம், இறைவன் தனக்குச் சொன்னபடி அந்த நாளிலேயே, இஸ்மயேலுக்கும், தன் வீட்டில் பிறந்தவர்களும், பணத்திற்கு வாங்கப்பட்டவர்களுமான தன் வீட்டிலுள்ள எல்லா ஆண்களுக்கும் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம் செய்தான்.
- 24 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் தொண்ணூற்றொன்பது வயதுடையவனாய் இருந்தான்.
- 25 அவனுடைய மகன் இஸ்மயேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் செய்யப்படும்போது அவன் பதின்மூன்று வயதுடையவனாய் இருந்தான்;
- 26 ஆபிரகாமும் அவன் மகன் இஸ்மயேலும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
- 27 ஆபிரகாமின் வீட்டில் பிறந்தவர்களும், அவனால் பணங்கொடுத்து அந்நியரிடம் வாங்கப்பட்டவர்களுமான அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களும் ஆபிரகாமுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.