욥기 12장 타밀 OITCE
- 1 பின்பு யோபு மறுமொழியாக சொன்னது:
- 2 “நீங்கள் பெரியவர்கள், சந்தேகம் இல்லை. ஞானமும் உங்களுடனே செத்துவிடும்!
- 3 எனக்கும் உங்களைப்போல் ஒரு மனம் உண்டு; நான் உங்களுக்குக் குறைந்தவனல்ல; இவற்றையெல்லாம் அறியாதவன் யார்?
- 4 “நான் இறைவனை நோக்கிக் கூப்பிடுவேன், அவர் பதிலளிப்பார்; நான் நீதிமானும், குற்றமற்றவனுமாய் இருந்தபோதிலும், என் நண்பர்களின் சிரிப்பிற்கு ஆளாகிவிட்டேன்.
- 5 சுகவாழ்வுள்ள மனிதர்கள் அவலத்தை வெறுக்கிறார்கள்; அவர்கள் அது, கால் இடறுகிறவர்களின் விதி என்று எண்ணுகிறார்கள்.
- 6 திருடர்களுடைய கூடாரங்கள் குழப்பமின்றி இருக்கின்றன; தெய்வத்தைத் தங்கள் கைகளிலேந்திச் செல்கிறவர்களும், இறைவனைக் கோபமூட்டுகிறவர்களும் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
- 7 “ஆனால் மிருகங்களைக் கேளுங்கள்; அவை உங்களுக்குப் போதிக்கும், ஆகாயத்துப் பறவைகளைக் கேளுங்கள்; அவை உங்களுக்குச் சொல்லித் தரும்.
- 8 பூமியுடன் பேசுங்கள், அது உங்களுக்குப் போதிக்கும். அல்லது கடல் மீன்களே உங்களுக்கு அறிவிக்கட்டும்.
- 9 யெகோவாவின் கரமே இதைச் செய்தது என்பதை இவற்றுள் எது அறியாதிருக்கிறது?
- 10 ஒவ்வொரு உயிரினங்களின் உயிரும், எல்லா மனிதரின் சுவாசமும் அவரின் கையிலேயே இருக்கின்றன.
- 11 நாவு உணவை ருசிப்பதுபோல, காது சொற்களைச் சோதிக்கிறது அல்லவோ?
- 12 முதியோரிடத்தில் ஞானம் இருக்கும். வயது சென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
- 13 “ஞானமும் வல்லமையும் இறைவனுக்கு உரியன; ஆலோசனையும், விளங்கும் ஆற்றலும் அவருடையனவே.
- 14 அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் சிறைப்படுத்தும் மனிதனை விடுவிக்கவும் முடியாது.
- 15 தண்ணீரை அவர் தடுத்தால், அங்கு வறட்சி உண்டாகிறது; அவர் தண்ணீரைத் திறந்துவிடும்போது அது நாட்டை அழிக்கிறது.
- 16 பெலமும் வெற்றியும் அவருக்குரியன; ஏமாற்றுகிறவனும், ஏமாறுகிறவனுமான இருவருமே அவருடையவர்கள்.
- 17 அவர் ஆலோசகர்களின் ஞானத்தை அகற்றி அனுப்பி விடுகிறார்; நீதிபதிகளையும் மூடராக்குகிறார்.
- 18 அரசர்களுடைய கட்டுகளை அவர் அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளில் துணியைக் கட்டுகிறார்.
- 19 அவர் ஆசாரியர்களை நீக்கி, நீண்டகால அதிகாரிகளைக் கவிழ்க்கிறார்.
- 20 அவர் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களின் உதடுகளை மவுனமாக்குகிறார்; முதியோரின் நிதானத்தையும் எடுத்துப் போடுகிறார்.
- 21 அவர் உயர்குடி மக்கள்மேல் இகழ்ச்சியை ஊற்றி பலவானைப் பலமிழக்கச் செய்கிறார்.
- 22 அவர் இருளின் ஆழ்ந்த செயல்களை வெளிப்படுத்துகிறார்; இருளின் ஆழத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
- 23 அவர் மக்களைப் பெரிதாக்கி, அவர்களை அழிக்கிறார்; மக்களை விரிவாக்கி அவர்களைச் சிதறப்பண்ணுகிறார்.
- 24 பூமியின் தலைவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இழக்கப்பண்ணுகிறார்; பாதையில்லாத பாழிடங்களில் அவர்களை அலையப்பண்ணுகிறார்.
- 25 அவர்கள் வெளிச்சமில்லாமல் இருளில் தடவித் திரிகிறார்கள்; வெறியரைப்போல் அவர்களைத் தள்ளாட வைக்கிறார்.