욥기 20장 타밀 OITCE
- 1 அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது:
- 2 “நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால், என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.
- 3 என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.
- 4 “மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து, எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:
- 5 கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.
- 6 இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,
- 7 அவன் உரம் போல அழிந்தே போவான்; அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.
- 8 ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.
- 9 அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது; அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.
- 10 அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்; அவனுடைய கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.
- 11 அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை, அவனுடன் தூசியில் கிடக்கும்.
- 12 “தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும், அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.
- 13 அதை விட்டுவிட மனமில்லாமல் தன் வாயில் வைத்திருக்கிறான்.
- 14 ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி, அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.
- 15 அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்; இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.
- 16 அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்; விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.
- 17 தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும், நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.
- 18 அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்; அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.
- 19 அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்; தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.
- 20 “நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை; ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.
- 21 அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை; அவனுடைய செழிப்பும் நிலைக்காது.
- 22 அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்; அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.
- 23 அவன் வயிறு நிரம்பும்போது, இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி, அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.
- 24 அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும், வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.
- 25 அவன் அதைத் தன் முதுகிலிருந்தும், அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான். பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;
- 26 அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும். அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து, அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.
- 27 வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்; பூமி அவனுக்கெதிராக எழும்பும்.
- 28 அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்; இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.
- 29 கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே; இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”