욥기 33장 타밀 OITCE

  1. 1 “யோபுவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும்; நான் சொல்வதைக் கவனியும்.
  2. 2 இப்பொழுது நான் பேசப் போகிறேன்; என் வார்த்தைகள் என் நாவின் நுனியில் இருக்கின்றன.
  3. 3 என் வார்த்தைகள் நேர்மையான இருதயத்திலிருந்து வெளிவருகின்றன; நான் அறிந்தவற்றை என் உதடுகள் உண்மையாய்ப் பேசுகின்றன.
  4. 4 இறைவனின் ஆவியானவரே என்னைப் படைத்தார்; எல்லாம் வல்லவரின் சுவாசமே எனக்கு உயிரைத் தருகிறது.
  5. 5 உம்மால் முடியுமானால் எனக்குப் பதில் கூறும்; என்னோடு வாதாட உம்மை ஆயத்தப்படுத்தும்.
  6. 6 இறைவனுக்கு முன்பாக நானும் உம்மைப் போன்றவன்தான்; நானும் மண்ணிலிருந்தே உருவாக்கப்பட்டேன்.
  7. 7 என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை, என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
  8. 8 “என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
  9. 9 ‘நான் தூய்மையானவன், குற்றமற்றவன், நான் சுத்தமானவன், பாவமற்றவன்.
  10. 10 இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
  11. 11 அவர் என் கால்களை விலங்குகளில் மாட்டுகிறார்; என் வழிகளையெல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்.’
  12. 12 “ஆனால் நான் உமக்குச் சொல்கிறேன், இதில் நீர் சொன்னது சரியல்ல, ஏனெனில் இறைவன் மனிதனைவிட மிகவும் பெரியவர்.
  13. 13 அவர் மனிதனுடைய கேள்விகள் எதற்குமே பதிலளிக்கவில்லை என நீர் ஏன் முறையிடுகிறீர்?
  14. 14 மனிதர்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும், இறைவன் ஒருவிதமாகவும், இன்னொரு விதமாகவும் பேசுகிறார்.
  15. 15 மனிதர் படுத்திருக்கையில், ஆழ்ந்த நித்திரையிலும், கனவிலும், இரவு தரிசனத்திலும் அவர் பேசுகிறார்.
  16. 16 அவர் மனிதர்களின் காதுகளில் பேசி, தம்முடைய எச்சரிப்புகளினால் அவர்களைத் திகிலூட்டக்கூடும்.
  17. 17 பிழை செய்வதிலிருந்து மனிதரை விலக்கவும், தற்பெருமையை தடுக்கவுமே இவ்வாறு செய்கிறார்.
  18. 18 மனிதருடைய ஆத்துமா பிரேதக்குழியில் விழாதபடியும், அவர்களுடைய உயிர் வாளால் அழியாதபடியும் காப்பாற்றுகிறார்.
  19. 19 “அல்லது மனிதர்கள் தங்கள் எலும்புகளில் உண்டான தொடர்ச்சியான நோவுடன் படுக்கையிலேயே தண்டிக்கப்படக் கூடும்.
  20. 20 அப்பொழுது அவர்களுடைய உள்ளம் உணவையும், சுவையான உணவையும் வெறுக்கிறது.
  21. 21 அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
  22. 22 அவர்களுடைய ஆத்துமா பிரேதக் குழியையும், அவர்களுடைய உயிர் மரண தூதுவர்களையும் நெருங்குகிறது.
  23. 23 ஆனாலும் ஆயிரத்தில் ஒருவனான தூதன் ஒருவன் அவர்கள் பக்கத்திலிருந்து, அவர்களுக்காகப் பரிந்துபேசி, அவர்களுக்கு சரியானவற்றைச் சொல்லிக்கொடுத்து,
  24. 24 அவர்களுக்குக் கிருபைகாட்டி, ‘நான் அவர்களுக்கு மீட்கும் பொருளைக் கண்டுபிடித்தேன். ஆகவே இவர்களைக் குழிக்குள் போவதிலிருந்து தப்பவிடும்’ என்று சொல்வானாகில்,
  25. 25 அவர்களின் உடல் குழந்தையின் உடலைப்போல் புதிதாகும், அவர்கள் வாலிப நாட்களில் இருந்ததுபோல் மாற்றப்படுவார்கள்.
  26. 26 அப்பொழுது அவர்கள் இறைவனை நோக்கி மன்றாடி, அவரிடமிருந்து தயவு பெறுகிறார்கள்; அவர்கள் இறைவனுடைய முகத்தைக் கண்டு மகிழ்வார்கள், இறைவன் அவர்களுடைய நீதியின் நிலையிலேயே திரும்பவும் வைக்கிறார்.
  27. 27 அவர்கள் மற்றவர்களைப் பார்த்து: ‘நான் பாவம் செய்து, நியாயத்தைப் புரட்டினேன், செய்ததற்குத் தகுந்த தண்டனையை நான் பெறவில்லை.
  28. 28 பிரேதக் குழிக்குள் போகாமல் என் ஆத்துமாவை இறைவனே மீட்டுக்கொண்டார்; நானும் ஒளியை அனுபவித்து சந்தோஷமாய் வாழ்வேன்.’
  29. 29 “இறைவன் இவற்றையெல்லாம் மனிதருக்கு இரண்டு முறைகள், ஏன், மூன்று முறைகள் திரும்பத் திரும்பச் செய்கிறார்.
  30. 30 குழியிலிருந்த அவர்களுடைய ஆத்துமாவை, வாழ்வின் ஒளியால் பிரகாசிக்கச் செய்கிறார்.
  31. 31 “யோபுவே, நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும்; மவுனமாய் இரும், நான் பேசுவேன்.
  32. 32 அதின்பின் ஏதாவது சொல்ல இருந்தால் எனக்குப் பதில் கூறும்; தயங்காமல் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க நான் விரும்புகிறேன்.
  33. 33 அப்படியில்லாவிட்டால், மவுனமாய் இருந்து நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்.”