시편 115편 타밀 OITCE
- 1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல, உமது அன்பின் நிமித்தமும், உமது சத்தியத்தின் நிமித்தமும் உமது பெயருக்கே மகிமை உண்டாகட்டும்.
- 2 பிற நாடுகளோ, “அவர்களுடைய இறைவன் எங்கே?” என்று ஏன் கேட்கிறார்கள்.
- 3 நம்முடைய இறைவன் பரலோகத்தில் இருக்கிறார்; அவர் தமக்கு விருப்பமானதையே செய்கிறார்.
- 4 ஆனால் பிற மக்களின் விக்கிரகங்கள் வெள்ளியும் தங்கமும், மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டதுமாய் இருக்கிறது.
- 5 அவைகளுக்கு வாய்கள் உண்டு, ஆனாலும் அவைகளால் பேசமுடியாது; கண்கள் உண்டு, அவைகளால் பார்க்க முடியாது.
- 6 அவைகளுக்குக் காதுகள் உண்டு, ஆனால் அவைகளால் கேட்கமுடியாது; மூக்கிருந்தும், அவைகளால் முகரமுடியாது.
- 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொட்டுப் பார்க்க முடியாது; கால்கள் உண்டு, ஆனால் அவைகளால் நடக்க முடியாது; தங்கள் தொண்டைகளால் சத்தமிடக்கூட அவைகளால் முடியாது.
- 8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிற எல்லோரும் அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
- 9 இஸ்ரயேல் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
- 10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவிடம் நம்பிக்கையாய் இருங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
- 11 அவருக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள்; அவரே உங்களுடைய உதவியும் கேடயமுமாய் இருக்கிறார்.
- 12 யெகோவா நம்மை நினைவில் வைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்; அவர் இஸ்ரயேலின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
- 13 யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற பெரியோரையும், சிறியோரையும் அவர் ஆசீர்வதிப்பார்.
- 14 யெகோவா உங்களைப் பெருகப்பண்ணுவாராக, உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பெருகப்பண்ணுவாராக.
- 15 வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவாவினால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.
- 16 மிக உயர்ந்த வானங்கள் யெகோவாவினுடையவை; பூமியையோ அவர் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.
- 17 இறந்தவர்கள் யெகோவாவைத் துதிப்பதில்லை, மரணத்தின் மவுனத்தில் இறங்குகிறவர்களும் துதியார்கள்.
- 18 இன்றுமுதல் என்றைக்கும் யெகோவாவைத் துதிப்போம். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.