시편 94편 타밀 OITCE
- 1 அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனாகிய யெகோவாவே, அநீதிக்கு பழிவாங்குகிற இறைவனே, பிரகாசியும்.
- 2 பூமியின் நீதிபதியே, எழுந்தருளும்; பெருமை உள்ளவர்களுக்குத் தக்கபடி பதிலளியும்.
- 3 எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, கொடியவர்கள், எவ்வளவு காலத்திற்கு கொடியவர்கள் களிகூர்ந்திருப்பார்கள்?
- 4 அவர்கள் அகங்காரமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்; தீமை செய்வோர் யாவரும் பெருமை நிறைந்து பேசுகிறார்கள்.
- 5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை தாக்குகிறார்கள்; உமது உரிமைச்சொத்தை ஒடுக்குகிறார்கள்.
- 6 விதவைகளையும் வேறுநாட்டைச் சேர்ந்தவரையும் அவர்கள் அழிக்கிறார்கள்; அவர்கள் தந்தையற்றவர்களைக் கொலைசெய்கிறார்கள்.
- 7 “யெகோவா இவற்றைக் காண்பதில்லை, யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
- 8 மக்கள் மத்தியில் அறிவற்றவர்களாய் இருப்பவர்களே, கவனமாயிருங்கள்; மூடரே, நீங்கள் எப்பொழுது அறிவு பெறுவீர்கள்?
- 9 காதைப் படைத்தவர் கேட்கமாட்டாரோ? கண்ணை உருவாக்கியவர் பார்க்கமாட்டாரோ?
- 10 மக்களைத் தண்டிக்கிறவர் உங்களையும் தண்டிக்கமாட்டாரோ? மனிதருக்குப் போதிக்கிறவர் அறிவில் குறைந்தவரோ?
- 11 மனிதரின் சிந்தனைகளை யெகோவா அறிந்திருக்கிறார்; அவை பயனற்றவை என்பதையும் அவர் அறிவார்.
- 12 யெகோவாவே, நீர் தண்டித்து, உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
- 13 கொடியவர்களுக்கோ குழிவெட்டப்படும் வரை கஷ்ட நாட்களிலிருந்து அவர்களுக்கு நீர் விடுதலை வழங்குகிறீர்.
- 14 ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
- 15 நீதியின்மேல் நியாயத்தீர்ப்பு திரும்பவும் கட்டப்படும்; அதை இருதயத்தில் நேர்மையுள்ளோர் அனைவரும் பின்பற்றுவார்கள்.
- 16 எனக்காக கொடியவனுக்கு விரோதமாய் எழும்புகிறவன் யார்? தீமை செய்வோருக்கு எதிராய் எனக்குத் துணைநிற்பவன் யார்?
- 17 யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
- 18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
- 19 கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
- 20 தான் பிறப்பிக்கும் விதிமுறைகளினாலேயே துன்பத்தைக் கொண்டுவரும், ஊழல் நிறைந்த ஆட்சியாளர்கள் உமக்கு கூட்டாளிகளாயிருக்க முடியுமோ?
- 21 அந்தக் கொடியவர்கள் நீதிமான்களுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி, குற்றமற்றவர்களுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கிறார்கள்.
- 22 ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார்.
- 23 அவர் அவர்களுடைய பாவங்களுக்காகப் பதில்செய்து, அவர்கள் கொடுமைகளினிமித்தம் அவர்களை தண்டிப்பார்; எங்கள் இறைவனாகிய யெகோவா அவர்களை தண்டிப்பார்.