잠언 22장 타밀 OITCE
- 1 அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.
- 2 பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை.
- 3 விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
- 4 யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது.
- 5 கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள்.
- 6 பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள்.
- 7 பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள், கடன்வாங்கினவர்கள் கடன் கொடுத்தவருக்கு அடிமை.
- 8 அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும்.
- 9 தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; ஏனெனில் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
- 10 ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும்.
- 11 தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும் அரசனைத் தங்கள் நண்பனாக்கிக் கொள்வார்கள்.
- 12 யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார்.
- 13 “வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான்.
- 14 விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.
- 15 பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது, ஆனால் கண்டித்துத் திருத்துவதால் அதை அகற்றலாம்.
- 16 தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும், செல்வந்தர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறவர்களும் ஏழையாகிறார்கள்.
- 17 ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை.
- 18 ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள்.
- 19 உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்.
- 20 அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா?
- 21 அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு தகுந்த பதிலைக் கொடுக்கலாம்.
- 22 ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
- 23 ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.
- 24 கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே.
- 25 ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.
- 26 பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே.
- 27 ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்.
- 28 உன் முற்பிதாக்கள் நாட்டிய பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே.
- 29 தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா? அவர்கள் அரசர்களுக்குமுன் பணிசெய்வார்கள்; அவர்கள் பிரபலமற்றவர்களுக்கு முன்பாக பணிசெய்வதில்லை.