아가 5장 타밀 OITCE
- 1 என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்; என் நறுமணப் பொருட்களுடன் என் வெள்ளைப்போளத்தையும் சேர்த்துக்கொண்டேன். என்னுடைய தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்; நான் என்னுடைய திராட்சை இரசத்தையும் என் பாலையும் குடித்தேன்.
- 2 நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது. கேளுங்கள், என் காதலர் கதவைத் தட்டுகிறார்: “என் சகோதரியே, என் அன்பே, என் புறாவே, என் உத்தமியே, கதவைத்திற. என் தலை பனியால் நனைந்திருக்கிறது, என் தலைமுடி இரவின் தூறலினால் நனைந்திருக்கிறது” என்கிறார்.
- 3 நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்; அவற்றைத் திரும்பவும் நான் உடுக்க வேண்டுமோ? நான் என் கால்களைக் கழுவிவிட்டேன்; அவற்றைத் திரும்பவும் நான் அழுக்காக்க வேண்டுமோ?
- 4 என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்; என் உள்ளம் அவரைக்காண துடித்தது.
- 5 நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன், என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது; கதவின் பிடியில் என் கைவிரல்கள் வெள்ளைப்போளத்தைச் சிந்தின.
- 6 நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார். அதினால் என் உள்ளம் ஏங்கியது. நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை. நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை.
- 7 காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, என்னைக் கண்டார்கள். அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர், என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்; அவர்கள் அரணைக் காவல் செய்வோர்!
- 8 எருசலேம் மங்கையரே, நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்; நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்? காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
- 9 பெண்களுள் பேரழகியே, உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
- 10 என் காதலர் பிரகாசமான சிவந்த தோற்றமுள்ளவர், பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர்.
- 11 அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது; தலைமயிரோ சுருள் சுருளாகவும் காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
- 12 அவருடைய கண்களோ பாலில் குளித்து, நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும், பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன.
- 13 அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் பாத்திகள்போல் இருக்கின்றன. அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம் வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.
- 14 அவருடைய புயங்களோ கோமேதகம் பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன. அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட, துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது.
- 15 அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால் அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன. அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும் அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது.
- 16 அவருடைய வாய் இனிமையானது; அவர் முற்றிலும் அழகானவர். எருசலேமின் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்.