레위기 20장 타밀 OITCE
- 1 யெகோவா மோசேயிடம்,
- 2 “மேலும் நீ இஸ்ரயேல் மக்களுக்கு சொல்லவேண்டியதாவது, ‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேலில் வாழும் பிறநாட்டினனாவது, தங்கள் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்தால், அவன் கொல்லப்படவேண்டும். மக்கள் சமுதாயம் அவனைக் கல்லெறிந்து கொல்லவேண்டும்.
- 3 நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாக்கி, அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றுவேன். ஏனெனில், தன் பிள்ளைகளை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுத்ததினால் அவன் என் பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தி, என் பரிசுத்த பெயரையும் இழிவுபடுத்தினான்.
- 4 அவன் தன் பிள்ளைகளில் ஒன்றை மோளேக்கு தெய்வத்திற்குக் கொடுக்கிறபோது மக்கள் சமுதாயம் அவனைக் கொலைசெய்யத் தவறி, தங்கள் கண்களை மூடிக்கொண்டால்,
- 5 நான் என் முகத்தை அவனுக்கு விரோதமாகவும், அவன் குடும்பத்திற்கு விரோதமாகவும் திருப்புவேன். நான் அவனையும், எனக்கெதிராக மோளேக்கு தெய்வத்திடம் வேசித்தனத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்த, அவனைப் பின்பற்றுகிற யாவரையும் அவர்களுடைய மக்களிலிருந்து அகற்றுவேன்.
- 6 “ ‘ஜோதிடம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், பின்பற்றி, எனக்கெதிராக வேசித்தனம் செய்ய தன்னை ஒப்புக்கொடுக்கிறவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்புவேன். நான் அவனுடைய மக்களிலிருந்து அவனை அகற்றிவிடுவேன்.
- 7 “ ‘நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொண்டு பரிசுத்தராயிருங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
- 8 நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே உங்களைப் பரிசுத்தமாக்கும் யெகோவா.
- 9 “ ‘யாராவது தன் தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொலைசெய்யப்பட வேண்டும். அவன் தன் தகப்பனையோ, தன் தாயையோ சபித்துவிட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையிலேயே இருக்கும்.
- 10 “ ‘ஒருவன் தன் அயலானாகிய ஒருவனுடைய மனைவியோடே விபசாரம் பண்ணினால், அவனும் விபசாரியுமான, அந்த இருவருமே கொல்லப்படவேண்டும்.
- 11 “ ‘ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியோடே உறவுகொண்டால், அவன் தன் தகப்பனைக் கனவீனப்படுத்திவிட்டான். எனவே அந்த மனிதனும், அந்தப் பெண்ணும் கொலைசெய்யப்பட வேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
- 12 “ ‘ஒருவன் தன் மருமகளோடு உறவுகொண்டால், இருவரும் கொல்லப்படவேண்டும். அவர்கள் செய்திருப்பது இயல்புக்கு முரணான பாலுறவு. அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலையிலேயே இருக்கும்.
- 13 “ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வதுபோல், ஒரு ஆணுடன் உறவுகொண்டால், அவர்கள் அருவருப்பானதைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
- 14 “ ‘ஒருவன் ஒரு பெண்ணையும், அவளுடைய தாயையும் திருமணம் செய்தால் அது கொடுமை. அவனும், அவர்களும் நெருப்பில் எரிக்கப்படவேண்டும். அப்பொழுது உங்களுக்குள் கொடுமை இராது.
- 15 “ ‘ஒருவன் ஒரு மிருகத்தோடு பாலுறவு கொண்டால், அவன் கொல்லப்படவேண்டும். அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்லவேண்டும்.
- 16 “ ‘ஒரு பெண் ஒரு மிருகத்துடன் பாலுறவுகொள்ளும்படி அதை நெருங்கினால், அவளையும், அந்த மிருகத்தையும் கொன்றுவிடுங்கள். அவர்கள் கொல்லப்படவேண்டும். அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்.
- 17 “ ‘ஒருவன் தன் தகப்பனின் மகளான அல்லது தாயின் மகளான தன் சகோதரியை திருமணம் செய்து, அவர்கள் பாலுறவு கொண்டால் அது அவமானம். அவர்கள் தங்கள் மக்களின் பார்வையிலிருந்து அகற்றப்படவேண்டும். அவன் தன் சகோதரியை அவமானப்படுத்திவிட்டான். அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி.
- 18 “ ‘ஒரு மனிதன் ஒரு பெண்ணின் மாதவிடாய் காலத்தில் அவளுடன் பாலுறவு கொண்டால், அவன் அவளுடைய இரத்தப்போக்கை வெளிப்படுத்தினான். அவளும் அதை நிர்வாணமாக்கினாள். அவர்கள் இருவருமே தங்கள் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
- 19 “ ‘ஒருவன் தன் தாயின் சகோதரியுடனோ, தன் தகப்பனுடைய சகோதரியுடனோ பாலுறவு கொள்ளக்கூடாது. ஏனெனில், அது அவனுடைய நெருங்கிய உறவினனைக் கனவீனப்படுத்தும். அவர்கள் இருவருமே அக்குற்றத்திற்குப் பொறுப்பாளிகள்.
- 20 “ ‘ஒருவன் தன் சிறிய தாயுடன் உறவுகொண்டால், அவன் தன் சிறிய தகப்பனைக் கனவீனப்படுத்தினான். அக்குற்றத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள். அவர்கள் பிள்ளைப்பேறு அற்றவர்களாய்ச் சாவார்கள்.
- 21 “ ‘ஒரு மனிதன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம் செய்தால், அது ஒரு அசுத்தமான செயல். அவன் தன் சகோதரனை கனவீனப்படுத்திவிட்டான். எனவே அவர்கள் இருவரும் பிள்ளைப்பேறு இல்லாதிருப்பார்கள்.
- 22 “ ‘என் கட்டளைகளையும், சட்டங்களையும் கடைப்பிடித்து, அவற்றைப் பின்பற்றுங்கள். அப்பொழுது, நீங்கள் வாழும்படி நான் உங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நாடு, உங்களை வாந்திபண்ணாது.
- 23 நான் உங்கள் முன்னிலையிலிருந்து துரத்திவிடப் போகிற நாட்டினருடைய பழக்கவழக்கங்களின்படி நீங்கள் வாழக்கூடாது. அவர்கள் இந்தச் செயல்களைச் செய்ததினால், நான் அவர்களை அருவருத்து வெறுத்துவிட்டேன்.
- 24 நீங்கள் அவர்களுடைய நாட்டை உரிமையாக்கிக்கொள்வீர்கள். “பாலும் தேனும் ஓடும் அந்நாட்டை உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுப்பேன்” என்று உங்களுக்குச் சொன்னேன். மற்ற நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்திருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.
- 25 “ ‘ஆகையால் நீங்கள் சுத்தமான மிருகங்களுக்கும், அசுத்தமான மிருகங்களுக்கும் இடையிலும், சுத்தமான பறவைகளுக்கும், அசுத்தமான பறவைகளுக்கும் இடையிலும் வித்தியாசம் ஏற்படுத்துங்கள். உங்களுக்கு அசுத்தமென்று நான் விலக்கி வைத்த மிருகத்தினாலாவது, பறவையினாலாவது அல்லது தரையில் ஊரும் எதினாலாவது உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
- 26 நீங்கள் எனக்குப் பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில், யெகோவாவாகிய நான் பரிசுத்தராய் இருக்கிறேன். நீங்கள் என்னுடையவர்களாய் இருக்கும்படி, நான் நாடுகளிலிருந்து உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.
- 27 “ ‘அஞ்சனம் பார்க்கிற அல்லது குறிசொல்லுகிற ஒரு ஆணோ, பெண்ணோ உங்களுக்குள் இருந்தால், அவர்கள் கொலைசெய்யப்பட வேண்டும். நீங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும். அவர்களின் இரத்தப்பழி அவர்கள் தலைகளிலேயே இருக்கும்’ ” என்றார்.