디모데전서 3장 타밀 OITCE
- 1 யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு.
- 2 திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும்.
- 3 அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும்.
- 4 அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும்.
- 5 தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்?
- 6 அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும்.
- 7 அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம்.
- 8 அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது.
- 9 அவர்கள் விசுவாசத்தின் ஆழமான இரகசியத்தை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
- 10 முதலாவது அவர்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; அதற்குப் பின்பு அவர்களுக்கெதிராக குற்றம் ஒன்றும் இல்லையானால், அவர்கள் உதவி ஊழியராகப் பணிசெய்யலாம்.
- 11 அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், மதிப்புக்குரிய பெண்களாய் இருக்கவேண்டும். அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாக இருக்காமல், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.
- 12 ஒரு திருச்சபையின் உதவி ஊழியன், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாக இருக்கவேண்டும்; அவன் தனது பிள்ளைகளையும், தனது குடும்பத்தையும் நல்லமுறையில் நடத்துகிறவனாகவும் இருக்கவேண்டும்.
- 13 நல்லமுறையில் இந்த பணியைச் செய்கிறவர்கள் பிறரிடமிருந்து உயர் மதிப்பைப் பெறுவார்கள். கிறிஸ்து இயேசுவிலுள்ள தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதியையும் பெற்றுக்கொள்வார்கள்.
- 14 நான் விரைவில் உன்னிடம் வருவேன் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இந்த அறிவுறுத்தல்களை உனக்கு எழுதுகிறேன்.
- 15 ஏனெனில் நான் வரத்தாமதித்தாலும், இறைவனின் குடும்பத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன்; இறைவனின் குடும்பமானது ஜீவனுள்ள இறைவனின் திருச்சபையாயிருக்கிறது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது.
- 16 இறை பக்தியைக்குறித்த இரகசியம் மிகப்பெரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை: இறைவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார். இறைத்தூதர்களால் காணப்பட்டார். அவர் யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார். அவர் உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார். அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.