히브리서 2장 타밀 OITCE
- 1 எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம்.
- 2 இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.
- 3 அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
- 4 இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
- 5 வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
- 6 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?
- 7 நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
- 8 எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை.
- 9 ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
- 10 அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன.
- 11 பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார்.
- 12 இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.”
- 13 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
- 14 பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும்,
- 15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார்.
- 16 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.
- 17 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார்.
- 18 இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.