시편 107편 타밀 OITCE
- 1 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- 2 யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள், எதிரிகளின் கையிலிருந்து அவரால் விடுதலையாக்கப்பட்டவர்கள்,
- 3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருக்கும் பல நாடுகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்கள் இதைச் சொல்லட்டும்.
- 4 சிலர் தாங்கள் குடியிருக்கத்தக்க பட்டணத்திற்குப் போகும் வழியைக் காணாமல், பாலைவனத்தின் பாழ்நிலங்களிலே அலைந்து திரிந்தார்கள்.
- 5 அவர்கள் பசியாயும் தாகமாயும் இருந்தார்கள், அவர்களுடைய ஆத்துமா சோர்ந்துபோயிற்று.
- 6 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை விடுவித்தார்.
- 7 குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்திற்கு அவர் அவர்களை பாதுகாப்பாக வழிநடத்தினார்.
- 8 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களின் நிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
- 9 ஏனெனில் தாகமுள்ளவர்களை அவர் திருப்தியாக்குகிறார்; பசியாய் இருப்பவர்களை நன்மையினால் நிரப்புகிறார்.
- 10 சிலர் இருளிலும் காரிருளிலும் உட்கார்ந்தார்கள், சிறைக் கைதிகள் இரும்புச் சங்கிலிகளில் கட்டுண்டு வேதனைப்பட்டார்கள்.
- 11 ஏனெனில், அவர்கள் இறைவனுடைய கட்டளைகளுக்கு விரோதமாய்க் கலகம்செய்து, மகா உன்னதமான இறைவனின் ஆலோசனையை அசட்டைபண்ணினார்கள்.
- 12 ஆகவே அவர் அவர்களைக் கடினமான வேலைக்குட்படுத்தினார்; அவர்கள் இடறி விழுந்தார்கள்; அவர்களுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருக்கவில்லை.
- 13 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
- 14 அவர் அவர்களை, இருட்டிலிருந்தும் ஆழ்ந்த இருளிலிருந்தும் வெளியே கொண்டுவந்து, அவர்களுடைய சங்கிலிகளை அறுத்தெறிந்தார்.
- 15 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
- 16 ஏனெனில் யெகோவா வெண்கல வாசல்களை உடைத்தெறிகிறார்; இரும்புத் தாழ்ப்பாள்களை வெட்டிப் பிளக்கிறார்.
- 17 சிலர் தங்களுடைய கலக வழிகளின் காரணமாக மூடராகி, தங்கள் அநியாயத்தினிமித்தம் உபத்திரவத்தை அனுபவித்தார்கள்.
- 18 அவர்கள் எல்லா உணவையும் அருவருத்து, மரண வாசல்களை நெருங்கினார்கள்.
- 19 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
- 20 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவர்களைச் சுகப்படுத்தினார்; அவர் அவர்களை மரணக் குழிகளிலிருந்து தப்புவித்தார்.
- 21 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
- 22 அவர்கள் நன்றிக் காணிக்கைகளைப் பலியிட்டு, மகிழ்ச்சியின் பாடல்களால் அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.
- 23 சிலர் கப்பல்களில் ஏறிக் கடல்மேல் போனார்கள்; அவர்கள் கடலின் திரளான தண்ணீரின்மேல் தொழில் செய்தார்கள்.
- 24 அவர்கள் யெகோவாவினுடைய செயல்களையும், ஆழத்தில் அவர் செய்த புதுமையான செயல்களையும் கண்டார்கள்.
- 25 ஏனெனில் அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல்காற்று எழும்பிற்று; அது அலைகளை உயர எழச்செய்தது.
- 26 அவர்கள் வானங்கள்வரை ஏறி, ஆழங்கள்வரை இறங்கிச் சென்றனர்; அவர்களுடைய ஆபத்தில் அவர்களுடைய தைரியம் பயனற்றுப்போனது.
- 27 அவர்கள் வெறியரைப்போல் உருண்டு புரண்டார்கள்; அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போயிற்று.
- 28 அப்பொழுது அவர்கள் தங்கள் கஷ்டத்திலே யெகோவாவை நோக்கிக் கதறினார்கள்; அவர் அவர்களுடைய துன்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றினார்.
- 29 அவர் புயல்காற்றை தென்றல்போல் அமைதியாக்கினார்; கடலின் அலைகள் அடங்கிப்போயின.
- 30 அது அமைதியானபோது அவர்கள் மகிழ்ந்தார்கள்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்குப் போக அவர் அவர்களுக்கு வழிகாட்டினார்.
- 31 யெகோவாவினுடைய உடன்படிக்கையின் அன்பினிமித்தமும், அவர் மனிதருக்குச் செய்யும் அதிசயமான செயல்களினிமித்தமும் நன்றி செலுத்துவார்களாக.
- 32 மக்களின் சபையில் அவர்கள் அவரை புகழ்ந்துயர்த்தி, தலைவர்களின் ஆலோசனை சபையிலே அவரைத் துதிக்கட்டும்.
- 33 யெகோவா ஆறுகளைப் பாலைவனமாகவும், சுரக்கும் நீரூற்றுகளை வறண்ட தரையாகவும் மாற்றினார்,
- 34 செழிப்பான நாட்டை உவர் நிலமாக மாற்றினார்; அங்கே வசித்தவர்களின் கொடுமையின் நிமித்தமே அவ்வாறு செய்தார்.
- 35 அவர் பாலைவனத்தை நீர்த்தடாகங்களாகவும், வறண்ட நிலத்தை சுரக்கும் நீரூற்றாகவும் மாற்றினார்.
- 36 பசியுள்ளவர்களை அங்கே குடியிருக்கும்படி கொண்டுவந்தார்; அங்கே அவர்கள் தாங்கள் குடியிருக்கத்தக்க ஒரு பட்டணத்தைக் கட்டினார்கள்.
- 37 அவர்கள் வயல்வெளிகளில் விதைத்து, திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினார்கள்; அவை செழிப்பான அறுவடையைக் கொடுத்தன.
- 38 யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார், அவர்கள் எண்ணிக்கை வெகுவாய்ப் பெருகியது; அவர்களுடைய மந்தைகள் குறைந்துபோக அவர் விடவில்லை.
- 39 பின்பு இறைவனது மக்களின் எண்ணிக்கை குறைந்தது, அவர்கள் ஒடுக்குதலினாலும் இடுக்கணினாலும் கவலையினாலும் சிறுமையடைந்தார்கள்;
- 40 பெருமையான அதிகாரிகளின்மேல் இகழ்வை வரப்பண்ணும் அவரே, அவர்களைப் பாதையற்ற பாழ்நிலத்தில் அலையப்பண்ணினார்.
- 41 ஆனால் எளியவர்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து தூக்கியெடுத்து, அவர்களுடைய குடும்பங்களை மந்தையைப்போல் பெருகப்பண்ணினார்.
- 42 நீதிமான்கள் அதைக்கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் கொடியவர்கள் அனைவரும் வாயடைத்துப் போய்விடுவார்கள்.
- 43 ஞானமுள்ளவன் எவனோ அவன் இதைக் கவனித்துக் கொள்ளட்டும்; யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பின் செயல்களைப்பற்றி சிந்திக்கட்டும்.